நிதிச் சுமை அதிகரிக்கும் அபாயம்
இந்த இலவச அறிவிப்புகள் (UCTs) பல மாநிலங்களில் அதிகரித்து வருவது, அவற்றின் நிதிநிலைக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. 2022-23 நிதியாண்டுக்கும் 2025-26 நிதியாண்டுக்கும் இடையே, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலை உள்ளது. இந்த ஆண்டு, இலவச திட்டங்களுக்கான செலவு மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 0.19% முதல் 1.25% வரையிலும், மொத்த பட்ஜெட் செலவினத்தில் 8.26% வரையிலும் செல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களின் மொத்த நிதிப் பற்றாக்குறை (Gross Fiscal Deficit) 2.6% ஆக இருந்தது, இது 2024-25ல் 3.2% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலங்கள் அவசியமான செலவுகளுக்காகவே அதிகம் கடன் வாங்க வேண்டியுள்ளது. 2023-24ல், மாநிலங்களின் மொத்த வருவாயில் சுமார் 62% சம்பளம், வட்டி போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கே சென்றுவிட்டன. இது வளர்ச்சிக்குத் தேவையான மூலதன முதலீடுகளை (Capital Expenditure) கடுமையாகப் பாதிக்கிறது.
நலத்திட்டங்களின் உண்மையான தாக்கம் என்ன?
இந்த இலவச ரொக்கப் பரிமாற்றங்கள் (UCTs) குறுகிய காலத்தில் மக்களுக்கு உடனடி நிவாரணம் அளித்தாலும், ஊட்டச்சத்து, கல்வி, வறுமை ஒழிப்பு போன்ற முக்கிய துறைகளில் நீண்டகால முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்று பொருளாதார ஆய்வறிக்கை வாதிடுகிறது. வேலைவாய்ப்புடன் அல்லது சேவைகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாததால், இவை தற்காலிக ஸ்திரத்தன்மையை மட்டுமே அளிக்கின்றன. மேலும், இலவசமாக வரும் வருமானம், குறிப்பாக பெண்களின் வேலைவாய்ப்பு ஈடுபாட்டைக் குறைக்கும் அபாயமும் இருப்பதாக ஆய்வறிக்கை கவலை தெரிவித்துள்ளது. இதனால், மக்கள் சுயசார்பு அடைவதை விட, இந்த உதவிகளையே சார்ந்திருக்கும் நிலை உருவாகிறது.
நிபந்தனைகளுடன் கூடிய நலத்திட்டங்களே தீர்வு
இதற்கு மாற்றாக, நிபந்தனைகளுடன் கூடிய, குறிப்பிட்ட இலக்குகளை அடைவதை அடிப்படையாகக் கொண்ட நலத்திட்டங்களுக்கு மாற வேண்டும் என ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது. பிரேசில் நாட்டின் 'Bolsa Familia' திட்டம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இந்த திட்டத்தில், பள்ளி வருகை, சுகாதார பரிசோதனைகள் போன்ற நிபந்தனைகளுடன் ரொக்கப் பரிமாற்றங்கள் வழங்கப்படுகின்றன. மெக்ஸிகோவின் 'Progresa/Oportunidades' மற்றும் பிலிப்பைன்ஸின் 'Pantawid Pamilyang Pilipino Program' போன்ற திட்டங்களும் கல்வி மற்றும் சுகாதாரத்தில் அளவிடக்கூடிய முன்னேற்றங்களைக் காட்டியுள்ளன. இவை நலத்திட்டச் செலவினங்களை மனித மூலதன மேம்பாட்டிற்கான முதலீடுகளாக மாற்றுகின்றன.
எதிர்காலத்திற்கான பரிந்துரை
எனவே, மாநில அரசுகள் தங்கள் இலவச திட்டங்களை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். நிபந்தனைகள், காலக்கெடு, மற்றும் இலக்கு அடிப்படையிலான மதிப்பீடுகளைச் சேர்க்க வேண்டும். திட்டங்கள் நிரந்தர நிதிச் சுமையாக மாறுவதைத் தடுக்க, காலக்கெடு (Sunset Clauses) மற்றும் அவ்வப்போது தணிக்கைகள் (Audits) அவசியம். நலத்திட்டங்கள் மனித மூலதன மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கான முதலீடுகளுக்கு துணையாக இருக்க வேண்டுமே தவிர, அதற்கு மாற்றாக அமைந்துவிடக் கூடாது. இந்த அணுகுமுறை, குறுகியகால நுகர்வை அதிகரிப்பதோடு நின்றுவிடாமல், நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கும், நிதி நிலைத்தன்மைக்கும் வழிவகுக்கும் என்பதே ஆய்வறிக்கையின் முக்கியக் கருத்தாகும்.