இந்த ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-மே 2026) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்துள்ளது. உற்பத்தி துறை ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும், எல் நினோ காரணமாக விவசாயத் துறையும், கிராமப்புற தேவையும் அழுத்தத்தில் உள்ளன. சேவைகள் துறை மற்றும் குறைந்த கச்சா எண்ணெய் விலையே இனி முக்கிய பங்கு வகிக்கும்.
உற்பத்தி துறையின் பின்னடைவு
HSBC Global Investment Research-ன் புதிய அறிக்கையின்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்திய பொருளாதார வேகம் சற்று குறைந்துள்ளது. உற்பத்தி துறை ஓரளவு தாக்குப்பிடித்தாலும், விவசாய துறையில் ஏற்பட்டிருக்கும் சவால்கள் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.
அதிக செலவுக்கு மத்தியிலும் உற்பத்தி வளர்ச்சி
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 20% பங்கு வகிக்கும் உற்பத்தி துறை, நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் சீராக செயல்பட்டது. மார்ச் முதல் மே வரை எரிசக்தி செலவுகள் உயர்ந்தபோதும், நிறுவனங்கள் எதிர்கால விலை நிச்சயமற்ற தன்மையை சமாளிக்க கையிருப்புகளை (Inventories) அதிகரித்து உற்பத்தியை தக்கவைத்தன. மேலும், அமெரிக்காவின் தற்காலிக குறைந்த இறக்குமதி வரிகள், உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து, உற்பத்திக்கு ஒரு குறுகிய கால ஆதரவை அளித்தது.
விவசாயம் மற்றும் கிராமப்புற தேவையில் சவால்கள்
இந்தியாவின் GDP-யில் மற்றொரு 20% பங்களிக்கும் விவசாயத் துறை, வலுவான எல் நினோ பாதிப்பு காரணமாக தற்போது பெரும் அழுத்தத்தில் உள்ளது. பருவமழை தொடர்பான விதைப்பு பணிகள் மெதுவாகவே நடந்துள்ளன. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த முறை வெறும் 17% பயிர் பரப்பளவிலேயே விதைப்பு செய்யப்பட்டுள்ளது (கடந்த ஆண்டு 24%). குறைந்த நீர்த்தேக்க அளவுகள் மற்றும் சுமார் 30% மழைப் பற்றாக்குறை ஆகியவை பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளன.
இந்த விவசாய நெருக்கடிகள் கிராமப்புற தேவையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இரு சக்கர வாகன விற்பனை மற்றும் கிராமப்புற வங்கிகளில் உள்ள சேமிப்பு வளர்ச்சி போன்ற நுகர்வோர் தேவையின் குறிகாட்டிகள் வேகம் குறைந்துள்ளன. கிராமப்புறங்களில் இளைஞர்களின் வேலையின்மை நகர்ப்புறங்களை விட அதிகமாக உயர்ந்துள்ளதால், அந்த பகுதிகளில் நுகர்வு குறைய வாய்ப்புள்ளது.
சேவைகள் துறையின் நம்பிக்கை
உற்பத்தி துறை சில சவால்களை எதிர்கொள்ளும் போதும், விவசாயம் தட்பவெப்பநிலை சார்ந்த பிரச்சனைகளில் இருக்கும்போதும், இந்தியாவின் GDP-யில் சுமார் 55% பங்கு வகிக்கும் சேவைகள் துறை, 2026 ஆம் ஆண்டின் மீதமுள்ள காலத்திற்கு வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணங்களாக இரண்டு விஷயங்கள் கூறப்படுகின்றன: முதலில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் இயக்கச் செலவுகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவதாக, அரசு வழங்கும் அந்நியச் செலாவணி தொகுப்பு (Foreign Exchange Package) நிதிச் சேவைகள் துறைக்கு சாதகமாக அமையும். கடன் வாங்கும் செலவுகள் ஏற்கனவே குறைந்து வருவதால், பணப்புழக்கம் மேம்பட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும்.
