நோயாளிகளின் நிலைமை எப்படி?
இதய செயலிழப்பு (Heart Failure) நோயால் பாதிக்கப்பட்ட இந்திய நோயாளிகளின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு முறையான நிதிப் பாதுகாப்பு இல்லை. சமீபத்திய ஆய்வின்படி, 10 நோயாளிகளில் 7 பேருக்கு எந்தவிதமான நிதிப் பாதுகாப்பும் இல்லை.
சிகிச்சைக்கான மொத்த செலவில், நோயாளிகள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து 92.6% வரை செலவு செய்கிறார்கள். காப்பீடு இல்லாதவர்களுக்கு, கிட்டத்தட்ட அனைத்து செலவுகளும் வெளியிலேயே செய்யப்படுகின்றன. சராசரியாக, ஒரு வருடத்திற்கான தனிப்பட்ட செலவு ₹1,06,566 ஆக உள்ளது. ஒருமுறை மருத்துவமனையில் சேர்ப்பதற்கே சுமார் ₹1.19 லட்சம் வரை ஆகலாம். சராசரி செலவு ₹49,600 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிதிச் சுமையை சமாளிக்க, 68% நோயாளிகள் தங்கள் சேமிப்பை பயன்படுத்துகின்றனர். 54% பேர் குடும்பத்தாரின் உதவியை நாடுகின்றனர். மேலும், 15% பேர் உறவினர்களிடம் கடன் வாங்குகின்றனர். இதன் விளைவாக, 37.7% குடும்பங்கள் மருத்துவச் செலவுகளால் கடுமையான பொருளாதார பாதிப்புக்குள்ளாகின்றன. கிட்டதட்ட 17.7% குடும்பங்கள் கடன் வாங்கியோ அல்லது குடும்ப உதவியுடனோ சிகிச்சை பெறுகின்றனர். இந்த நெருக்கடிகள் பெண்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், வேலையில்லாதவர்கள் மற்றும் குறைந்த கல்வி அறிவு கொண்டவர்களை அதிகமாக பாதிக்கிறது.
ஆயுஷ்மான் பாரத்தின் பங்களிப்பு போதுமா?
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB-PMJAY) போன்ற திட்டங்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இதய செயலிழப்பு போன்ற நாள்பட்ட நோய்களுக்கு இவை போதுமானதாக இல்லை. ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைக்கு காப்பீடு அளித்தாலும், நாள்பட்ட நோய்களை நிர்வகிப்பதில் இந்த திட்டங்களின் விழிப்புணர்வு, பதிவு மற்றும் உண்மையான அணுகல் ஆகியவற்றில் சிக்கல்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பாக, 2024 இல் வெளியான ஆய்வு, AB-PMJAY திட்டத்தின் கீழ் பதிவு செய்தாலும், இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு மருத்துவமனை வருகை அதிகரித்ததாகவோ, தனிப்பட்ட செலவுகள் குறைந்ததாகவோ அல்லது மருத்துவச் செலவுகளால் ஏற்படும் பாதிப்பு குறைந்ததாகவோ தெரியவில்லை. இது, இந்த திட்டம் சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு உதவலாம், ஆனால் நாள்பட்ட நோய்களுக்கான தொடர்ச்சியான நிதிச் சுமையை குறைப்பதில்லை என்பதைக் காட்டுகிறது. தற்போது, பொது நிதி இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைகளில் கவனம் செலுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக முதன்மை சுகாதாரப் பராமரிப்பில் (Primary Healthcare) அரசு செலவினங்கள் குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதாரத்தில் இதய நோயின் தாக்கம்
இதய செயலிழப்பு, இந்தியாவின் வேலை செய்யும் வயதுடைய இளைஞர்களின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆய்வில் பங்கேற்ற நோயாளிகளின் சராசரி வயது 55. இது மேற்கத்திய நாடுகளை விட சுமார் 10-15 ஆண்டுகள் குறைவு. இதனால், குடும்பத்தின் முக்கிய வருமானம் ஈட்டும் நபர்கள், அவர்களின் உச்சகட்ட வருவாய் ஈட்டும் வயதிலேயே நோய்வாய்ப்படுகின்றனர். இது உற்பத்தி இழப்பிற்கும், வணிக புதுமைகளுக்கும் தடையாக உள்ளது.
இதய நோய்கள் (Cardiovascular Diseases) காரணமாக ஏற்படும் மொத்த பொருளாதார இழப்பு மிக அதிகம். 2012 முதல் 2030 வரை, தொற்றா நோய்களால் (Non-Communicable Diseases) மட்டும் சுமார் $4.58 டிரில்லியன் இழப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தனிநபர் சேமிப்பைக் குறைத்து, நாட்டின் முதலீடுகளைக் கட்டுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது.
சுகாதார நிதியில் உள்ள சிக்கல்கள் மற்றும் கொள்கை இடைவெளிகள்
இந்தியாவின் ஒட்டுமொத்த சுகாதார நிதியுதவி முறை திறமையற்றதாக உள்ளது, இது நோயாளிகள் மீது நிதிச் சுமைகளை அதிகரிக்கிறது. நாடு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 3.7% சுகாதாரத்திற்காக செலவிடுகிறது. ஆனாலும், அதற்கேற்ற மருத்துவ முன்னேற்றங்கள் இல்லை. இது நிதி ஒதுக்கீட்டில் உள்ள சிக்கல்களையோ அல்லது திறமையின்மையையோ காட்டுகிறது.
மொத்த சுகாதார செலவினங்களில் கிட்டத்தட்ட 50% குடும்பங்களின் சொந்த பணத்திலிருந்து வருகிறது. இது உலகிலேயே மிக அதிகமாகும். இந்த தனிப்பட்ட செலவு முறை ஏழ்மையை அதிகரிக்கிறது. இதய செயலிழப்பு போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுப்பதை விட, குணப்படுத்துவது மிகவும் செலவு மிக்கது. தொடர்ச்சியான கவனிப்பு மற்றும் மருந்துகளால் தனிப்பட்ட செலவுகள் அதிகரிக்கின்றன.
சுகாதார காப்பீட்டு சந்தை சிக்கலானது. மூன்று இந்தியர்களில் இருவருக்கு காப்பீடு இல்லை. ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உதவுகின்றன, இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போதைய கொள்கைகள், நாள்பட்ட இதய செயலிழப்பால் ஏற்படும் நிதிப் பேரழிவைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் அவசரகால சிகிச்சைக்கு உதவினாலும், நீண்டகால, அதிகரிக்கும் நாள்பட்ட நோய் மேலாண்மை செலவுகளை ஈடுகட்டுவதில் அதன் வரம்புகள் பல நோயாளிகளை கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாக்குகின்றன.