இந்திய மாநிலங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. வருவாயில் சுமார் 90% சம்பளம் மற்றும் பென்ஷன் போன்ற கட்டாயச் செலவுகளுக்கே செலவாவதால், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்க முடியாமல் மாநிலங்கள் திணறி வருகின்றன.
இந்திய மாநிலங்களின் நிதி நிலைமை தற்போது ஒரு பெரிய கட்டமைப்பு சவாலை எதிர்கொண்டுள்ளது. புதிய சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுவது போன்ற 'Capital Expenditure' எனப்படும் முதலீட்டுச் செலவுகள், சம்பளம், பென்ஷன் மற்றும் பழைய கடன்களுக்கான வட்டி போன்றவற்றால் முடக்கப்பட்டுள்ளன.
வருவாயில் 90% செலவு
பல மாநிலங்களில், தங்களுக்கு வரும் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 90% தொகையை இந்த கட்டாயச் செலவுகளே எடுத்துக்கொள்கின்றன. இதனால் கையில் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற குழப்பத்தில் மாநில அரசுகள் உள்ளன. இதன் விளைவாக, மாநிலங்கள் தங்களின் வளர்ச்சித் திட்டங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றன. இது எதிர்கால பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
கடன் சுமை மற்றும் மறைமுக ஆபத்துகள்
மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறையில் சுமார் 76% சந்தை கடன்கள் மூலம் தான் ஈடு செய்யப்படுகிறது. வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் இந்தச் சூழலில், கடனைத் திருப்பிச் செலுத்துவதே மாநிலங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் கேரண்டி (Guarantees), ஒரு வகையான மறைமுகக் கடனாக உருவெடுத்துள்ளது. இது எதிர்காலத்தில் நிதி நிலைத்தன்மைக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறலாம்.
மாநிலங்களின் தற்போதைய நிலை
முக்கியமான 18 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வருவாய் பற்றாக்குறையை (Revenue Deficit) சந்தித்துள்ளன. குறிப்பாக பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள், அதிக வட்டி சுமை மற்றும் பென்ஷன் சுமைகளால் பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.
அடுத்து என்ன?
எல்லோரது பார்வையும் தற்போது 16-வது நிதி ஆணையத்தின் (16th Finance Commission) மீது திரும்பியுள்ளது. 2026-27 நிதியாண்டு முதல் இது அமலுக்கு வரும் நிலையில், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான வரி பகிர்வு மற்றும் மானியங்கள் குறித்த புதிய விதிமுறைகள், இந்த நிதி நெருக்கடியைச் சரிசெய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
