இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட 13% குறைவாக பதிவாகியுள்ளது. இதனால் சர்க்கரை, தானியங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் டூ-வீலர், டிராக்டர் விற்பனை நன்றாக இருந்தாலும், சம்பள உயர்வு குறைவது மற்றும் அடுத்த ராபி பயிரில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பொருளாதரத்தை பாதிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பருவமழை எப்படி இருக்கிறது?
தற்போது வரை (ஆகஸ்ட் 17, 2026) இந்தியாவின் பருவமழை சராசரியை விட 13% குறைவாக உள்ளது. எல் நினோ (El Niño) காரணமாக இந்த முறை மழைப் பொழிவு சீரற்று காணப்படுகிறது. மத்திய பகுதிகளில் மழை நன்றாக பெய்தாலும், தெற்கு மற்றும் கிழக்கு/வடகிழக்கு பகுதிகளில் 21% மற்றும் 27% வரை பற்றாக்குறை நிலவுகிறது.
இந்த சீரற்ற மழைப்பொழிவு, உணவுப் பணவீக்கத்திற்கும், குறிப்பாக தானியங்கள் மற்றும் சர்க்கரை விலை உயர்வதற்கும் முக்கிய காரணமாகி வருகிறது.
விவசாய நிலவரம்
விவசாயத் துறையும் இந்த வானிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய காரிஃப் பயிர் விதைப்பு (kharif sowing) வரலாற்று சராசரியை விட குறைந்துள்ளது. மொத்த விதைப்புப் பரப்பளவு கடந்த ஆண்டை விட 2% குறைந்துள்ளது. அரிசி சாகுபடி 3.7% குறைந்துள்ளது. பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் குறைந்துள்ளது. இதனால், உணவுப் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புற தேவை (Rural Demand)
விவசாயத் துறையில் பாதிப்பு இருந்தபோதிலும், கிராமப்புற நுகர்வு (Rural Consumption) எதிர்பார்த்ததை விட வலுவாக உள்ளது. ஜூலை மாத நிலவரப்படி, இரு சக்கர வாகனங்கள் (two-wheelers) மற்றும் டிராக்டர் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மழைப் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் செலவினங்களை தொடர்ந்து செய்வதாக தெரிகிறது.
இதனால், FMCG மற்றும் கிராமப்புறங்களை மையமாகக் கொண்ட வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும்.
என்னென்ன சவால்கள்?
இருப்பினும், ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த தேவை குறைய வாய்ப்புள்ளது. விவசாய மற்றும் விவசாயம் சாராத தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு (Rural wage growth) குறையத் தொடங்கியுள்ளது. உரங்கள் போன்ற உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வும், உலகளாவிய விநியோகச் சங்கிலி பிரச்சனைகளும் இதற்குக் காரணமாகும். இதன் விளைவாக விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படலாம்.
ராபி பயிர் (Rabi Crop) எதிர்காலம்
அடுத்த ராபி (குளிர்கால) பயிரின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. குளிர்கால பயிர் விளைச்சல் மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பைப் பொறுத்தது. தற்போது, நாடு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களில் 60% மட்டுமே நீர் உள்ளது. இது வழக்கமான அளவை விடக் குறைவு. குறிப்பாக வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் குறைந்த நீர் இருப்பு, கோதுமை மற்றும் பருப்பு வகைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
முதலீட்டாளர்கள் கவனம்
முதலீட்டாளர்கள் வரும் வாரங்களில் நீர்த்தேக்கங்களின் நிலவரம் மற்றும் கிராமப்புற சம்பள வளர்ச்சி குறித்த தரவுகளை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். பருவமழை இறுதிக் கட்டத்தில் விவசாயத் துறை மீண்டு வருமா என்பது உணவுப் பொருட்களின் விலை மற்றும் கிராமப்புற நுகர்வு முறைகளின் ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கும்.
