அரசுக்கு என்ன சுமை?
புதிய சம்பள கமிஷனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ₹3.7 லட்சம் கோடி முதல் ₹3.9 லட்சம் கோடி வரை கூடுதல் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 1.1% முதல் 1.2% வரை இருக்கும். இதனால், அரசின் நிதி பற்றாக்குறை (Fiscal Deficit) 4.4% என்ற இலக்கை தாண்டி 5% வரை செல்லக்கூடும். இது மேலும் கடன் வாங்கும் நிலையை அதிகரித்து, கடன்-GDP விகிதத்தை உயர்த்தும்.
பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு?
சம்பள உயர்வால் மக்களின் கையில் பணம் புழங்குவது அதிகரிக்கும். இது நுகர்வோர் தேவையை (Consumer Demand) தூண்டும் என்றாலும், மறுபுறம் பணவீக்கத்தை (Inflation) அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே 4.5% வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள பணவீக்கம், இந்த புதிய சம்பள உயர்வால் மேலும் அதிகரிக்கக்கூடும். கடந்த 7வது சம்பள கமிஷன் அமலாக்கத்தின் போது, மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததால் சில்லறை பணவீக்கம் (CPI) சுமார் 0.8% உயர்ந்தது நினைவிருக்கட்டும். எரிபொருள் விலை உயர்வு மற்றும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு போன்ற சூழலில், இந்த பணவீக்க உயர்வு ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கை பாதிக்கக்கூடும்.
தனியார் துறைக்கும் அரசுக்கும் இடையே சம்பள இடைவெளி?
முந்தைய சம்பள கமிஷன்கள் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் இடையேயான சம்பள இடைவெளி (Pay Gap) அதிகரித்து வருகிறது. 8வது சம்பள கமிஷனின் கீழ் எதிர்பார்க்கப்படும் 30-34% சம்பள உயர்வு இந்த இடைவெளியை மேலும் பெரிதாக்கக்கூடும். தனியார் துறையில் சம்பள உயர்வு 9.1% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வேறுபாடு திறமையானவர்களை அரசு வேலைகளுக்கு ஈர்க்கும், அதே சமயம் தனியார் துறையின் உற்பத்தித்திறனை பாதிக்கலாம்.
முக்கிய அபாயங்கள் என்ன?
அரசின் அதிகப்படியான கடன் வாங்கும் நிலை, கடன் தரத்தை (Credit Rating) பாதிக்கலாம். மேலும், மாநில அரசுகளும் இது போன்ற சம்பள மாற்றங்களை செய்தால், ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறை மோசமடையக்கூடும். நுகர்வை அதிகரிப்பதுடன், தேவை விநியோகத்தை (Demand vs Supply) விட அதிகமாக சென்றால் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போகும் அபாயம் உள்ளது. இந்த சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் நிதி நிலையை இது கணிசமாக பாதிக்கும்.