வெளிநாட்டு தளங்கள் மூலம் இந்தியர்கள் கிரிப்டோ கரன்சிகளை உள்ளூர் கிஃப்ட் கார்டுகளாக (Gift cards) மாற்றும் புதிய முறை மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி அபாயம் காரணமாக இது குறித்த விசாரணையை அரசு தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை நேரடியாக கிஃப்ட் கார்டுகளாக மாற்றும் புதிய வழிமுறை தற்போது அரசு அதிகாரிகளின் கடும் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த வெளிநாட்டு தளங்கள் மூலம், கிரிப்டோ சொத்துக்களைப் பயன்படுத்தி இந்திய சில்லறை விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்கும் நடைமுறை, நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது எப்படி வேலை செய்கிறது?
பயனர்கள் தங்களின் கிரிப்டோ வாலட்களில் உள்ள ஸ்டேபிள்காயின்களை (Stablecoins) வெளிநாட்டு இணையதளங்களுக்கு மாற்றுகின்றனர். அதற்குப் பதிலாக, அந்தத் தளங்கள் இந்திய ரீடைலர்களில் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் வவுச்சர்களை வழங்குகின்றன. இதன் மூலம், வங்கி அமைப்பிற்குள் வராமலேயே கிரிப்டோ சொத்துக்கள் செலவழிக்கும் சக்தியாக மாறுகின்றன. ஒரு வெளிநாட்டு நிறுவனம் மட்டும் இதுவரை 1.6 கோடி கார்டுகளை இந்தியர்களுக்கு வழங்கியுள்ளது என்பது இதன் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது.
ஏன் இந்த விசாரணை?
இந்தியாவில் கிரிப்டோ பரிமாற்றங்களுக்கு கடுமையான வரி விதிப்பு மற்றும் KYC விதிகள் உள்ளன. ஆனால், இந்த வவுச்சர் முறை மூலம் அந்த சட்டதிட்டங்களை எளிதாகத் தவிர்க்க முடிகிறது. குறிப்பாக, இந்த கிஃப்ட் கார்டுகள் 'Closed-loop' முறையில் இருப்பதால், இவை இதுவரை ரிசர்வ் வங்கியின் (RBI) நேரடி கண்காணிப்பில் இல்லை. இது பணமோசடி (Anti-money laundering) மற்றும் அந்நிய செலாவணி விதிகளை மீற வாய்ப்புள்ளதாக அரசு கருதுகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த விவகாரம் இந்திய பேமெண்ட்ஸ் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை. அரசு இந்த சேவைகளை 'எல்லை கடந்த பணப்பரிமாற்றம்' (Cross-border payment) என வகைப்படுத்தினால், வவுச்சர் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அக்ரிகேட்டர்களுக்கு புதிய கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வரலாம். இது போன்ற தளங்களை நம்பி முதலீடு செய்பவர்கள், சட்ட ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
