ஐஸ்கிரீம் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் 'Bombay Creamery' பிராண்டுடன் களமிறங்கியுள்ளது. வெறும் ₹10-க்கு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளதால், ஏற்கனவே சந்தையில் உள்ள Vadilal Industries மற்றும் Kwality Wall's நிறுவனங்களின் லாப வரம்பிற்கு (Margins) சவால் எழுந்துள்ளது.
Reliance Consumer Products Limited (RCPL) தனது புதிய ஐஸ்கிரீம் பிராண்டான 'Bombay Creamery'-யை அறிமுகம் செய்து, இந்திய ஐஸ்கிரீம் சந்தையில் கால்பதித்துள்ளது. வெறும் ₹10 விலையில் தொடங்கும் இந்த தயாரிப்புகள், சந்தையில் பெரும் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக Campa Cola-வில் கடைபிடித்த அதே ஆக்ரோஷமான விலை நிர்ணய உத்தியை இப்போதும் ரிலையன்ஸ் கையில் எடுத்துள்ளது.
சந்தை நிலவரம் மற்றும் பங்குகள்
தற்போது, சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றத்தில் உள்ளன. Kwality Wall's (India) பங்கு ₹41.53 என்ற விலையில் வர்த்தகமாகிறது, இது அதன் 52 வார குறைந்தபட்ச விலையான ₹22.24-ஐ விட அதிகம். அதேபோல், Vadilal Industries சுமார் ₹7,256 என்ற அளவில் உள்ளது.Vadial நிறுவனம் 34.2% வருவாய் வளர்ச்சியையும், 65.5% ஆப்பரேட்டிங் லாப வளர்ச்சியையும் கண்டுள்ளது. Kwality Wall's கடந்த காலாண்டுகளில் 14.9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
லாப வரம்பிற்கு (Margins) பாதிப்பு வருமா?
ரிலையன்ஸ் போன்ற வலுவான நெட்வொர்க் கொண்ட நிறுவனம் வரும்போது, விற்பனையை விட லாப வரம்புகள் குறைய வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். கடும் போட்டியை சமாளிக்க நிறுவனங்கள் மார்க்கெட்டிங் மற்றும் தள்ளுபடி செலவுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம்.
அடுத்த கட்டம் என்ன?
இந்தியாவில் ஐஸ்கிரீம் சந்தை ஆண்டுக்கு 11%-க்கும் மேல் வளர்ந்து வருகிறது. குளிர்பதன கிடங்குகள் மற்றும் மின்சார கட்டமைப்பு போன்ற தடைகள் இருந்தாலும், ரிலையன்ஸின் விநியோக வலிமை போட்டியாளர்களுக்கு நெருக்கடியைத் தரும். இனி வரும் காலங்களில், விற்பனை வளர்ச்சியை விட நிறுவனங்களின் லாபத்திறன் (Profitability) எப்படி இருக்கிறது என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.
