FSSAI நிறுவனம் இனி அதிக உப்பு, சர்க்கரை அல்லது கொழுப்பு நிறைந்த பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் கட்டாயமாக சிவப்பு நிற அறுகோண லேபிள்களை (Red Hexagonal Labels) ஒட்ட உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
எச்சரிக்கை லேபிள் என்றால் என்ன?
உச்ச நீதிமன்றத்தின் அழுத்தம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய லேபிளிங் முறையை FSSAI கொண்டு வந்துள்ளது. 2024-ஆம் ஆண்டிற்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR-NIN) வழிகாட்டுதலின்படி, ஒரு பொருளில் அதிகப்படியான சர்க்கரை, கொழுப்பு அல்லது உப்பு இருந்தால், அதில் 'High Fat', 'High Sugar' அல்லது 'High Salt' என சிவப்பு நிற அறுகோண அடையாளங்கள் இடம் பெறும்.
அமலாக்கம் எப்படி?
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது:
- Phase I: இரண்டுக்கும் மேற்பட்ட சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகள் மற்றும் இனிப்பு பானங்கள்.
- Phase II: ஏதேனும் ஒரு சத்து அதிகமாக உள்ள உணவுகள்.
முக்கியமாக, நெய், தேன், வெல்லம், உண்ணக்கூடிய எண்ணெய்கள் மற்றும் சாதாரண உப்பு போன்ற ஒற்றை மூலப்பொருள் கொண்ட பொருட்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
FMCG துறை மீது என்ன தாக்கம்?
இந்த அறிவிப்பு FMCG நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. தங்களின் தயாரிப்புகளில் உள்ள உப்பு, சர்க்கரை அளவைக் குறைக்க நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்படும். தயாரிப்புகளை மாற்றியமைப்பதற்கான (Reformulation) செலவுகள் அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, சுவை மாறினால் நுகர்வோர் வாங்கும் பழக்கம் மாறுமா என்ற பயமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
LocalCircles நடத்திய ஆய்வின்படி, இதுபோன்ற சிவப்பு லேபிள்கள் இருந்தால், பெரும்பாலான மக்கள் அந்தப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது. இது நிறுவனங்களின் விற்பனை அளவை (Volume) நேரடியாகப் பாதிக்கலாம். இதனால் லாப வரம்புகள் (Profit Margins) மற்றும் நிறுவனங்களின் எதிர்கால உத்திகள் எவ்வாறு அமையப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
