தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தோல்வி அடைந்ததால், 'Shalimar's Chef - Coriander Powder' மற்றும் 'Carrageenan' ஆகியவற்றை உடனடியாக சந்தையில் இருந்து திரும்பப் பெற FSSAI அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, பொதுமக்கள் பயன்படுத்தும் இரண்டு முக்கிய உணவுப் பொருட்களில் பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதையடுத்து, அவற்றை உடனடியாக சந்தையில் இருந்து திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது.
எதனால் இந்த தடை?
Nilgiri Oil & Allied Industries தயாரிக்கும் 'Shalimar's Chef - Coriander Powder'-ல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது ஆய்வக சோதனையில் தெரியவந்துள்ளது. அதேபோல், Aquagri Processing Pvt Ltd நிறுவனத்தின் 'Carrageenan' தயாரிப்பில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காட்மியம் (Cadmium) எனும் கனரக உலோகம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு மறுபரிசோதனை செய்ய வாய்ப்பளிக்கப்பட்டும், முடிவுகள் மாறாததால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவு நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
FSSAI கமிஷனர் துக்காராம் முண்டே தலைமையிலான இந்த அதிரடி நடவடிக்கை, உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தற்போது இந்த நிறுவனங்கள் தனிப்பட்ட (Private) நிறுவனங்கள் என்பதால் பங்குச்சந்தையில் நேரடி பாதிப்பு இல்லை என்றாலும், ஒட்டுமொத்த பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுத் துறையிலும் தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் இனி வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனங்கள் உடனடியாக அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்தும் இந்தத் தயாரிப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. தவறும் பட்சத்தில், 2017-ஆம் ஆண்டு உணவு திரும்பப் பெறுதல் விதிமுறைகளின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது.
