இறக்குமதி அனுமதி தாமதம்: என்ன நடக்கிறது?
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (Directorate General of Foreign Trade - DGFT) புதிய இறக்குமதி அனுமதிகளை வழங்குவதில் தாமதம் செய்வதே இந்த சிக்கலுக்கு முக்கிய காரணம். மார்ச் 31 அன்று காலாவதியான வருடாந்திர இறக்குமதி அனுமதிகள் இன்னும் புதுப்பிக்கப்படாததால், வங்கிகள் புதிய வெளிநாட்டு ஆர்டர்களை எடுப்பதை நிறுத்திவிட்டன. இதன் விளைவாக, பல டன்கள் தங்கம் மற்றும் வெள்ளி சுங்கச்சாவடிகளில் தேங்கியுள்ளன. வங்கிகள் ஒழுங்குமுறை அனுமதிக்காக காத்திருப்பதால், புதிய இறக்குமதி முற்றிலும் முடங்கியுள்ளது. உள்நாட்டு சப்ளை ஏற்கனவே குறைந்துள்ளது.
பண்டிகை கால தேவை: முக்கியமான நேரம்
உலகளவில் தங்கம் மற்றும் வெள்ளிக்கு இந்தியா ஒரு பெரிய நுகர்வோர் நாடு. தங்கம் நுகர்வில் இரண்டாவது இடத்திலும், வெள்ளி நுகர்வில் முதல் இடத்திலும் உள்ளது. அதிக தேவையைக் பூர்த்தி செய்ய பெரும்பாலான தேவைகளை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. தற்போது, தங்கம் வாங்குவதற்கு மிக முக்கியமான பண்டிகையான அட்சய திருதியை (Akshaya Tritiya) வரவிருக்கும் நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, நகைக் கடைகள் இந்த பண்டிகை காலத்திற்கு முன்பே தங்கள் இருப்பை அதிகப்படுத்தி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வார்கள். இந்த இறக்குமதி தடங்கல்கள் தொடர்ந்தால், சில்லறை வியாபாரிகள் பெரும் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும். இந்த பற்றாக்குறை, பண்டிகை கால விற்பனை சமயத்தில் உள்ளூர் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளை மேலும் உயர்த்தக்கூடும்.
