தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ள நிலையில், இளைஞர்கள் தங்கள் பரம்பரை நகைகளை விற்று வீடு, கல்வி, தொழில் என முக்கிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். உணர்வுப்பூர்வமாக வைத்திருந்த தங்கத்தை, இப்போது நிதி சொத்தாக கருதி பணமாக்கும் இந்த புதிய போக்கு, பிரபல நகைக்கடைகளை தங்கள் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் திட்டங்களை விரிவுபடுத்த தூண்டியுள்ளது.
இந்திய தங்க சந்தையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர், பரம்பரையாக வந்த நகைகளை வெறும் உணர்வுப்பூர்வமான நினைவுப் பொருளாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு முக்கிய நிதிச் சொத்தாக (Financial Asset) கருதி வருகின்றனர். இதன்படி, தங்களிடம் செயலற்று கிடக்கும் நகைகளை விற்று, வீடு வாங்குவது, வெளிநாட்டு கல்வி, அல்லது புதிய தொழில் தொடங்குவது போன்ற முக்கிய லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
தங்க விலை உயர்வு தந்த தாக்கம்
2026-ல் ஒரு பவுன் தங்கம் ₹1,60,000-ஐ தாண்டியதே இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாகும். கடந்த 2025 நிதியாண்டில் 33% மற்றும் 2026 நிதியாண்டில் 60% என தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பல குடும்பங்கள் தங்களிடம் உள்ள பயன்படுத்தப்படாத நகைகளை பெரிய முதலீட்டுக்கான ஆதாரமாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். சந்தை தரவுகளின்படி, 2026 நிதியாண்டில் தங்க நகைகளின் தேவை 21% குறைந்திருந்தாலும், தங்கம் கட்டிகள் (Gold Bars) மற்றும் நாணயங்கள் (Coins) போன்ற எளிதில் பணமாக்கக்கூடியவற்றின் மீதான ஆர்வம் 22% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மறுசுழற்சிக்கு தயாராகும் நகைக்கடைகள்
இந்த மாற்றத்தை உணர்ந்து, முன்னணி நகைக்கடைகள் தங்கள் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் (Gold Exchange) திட்டங்களை முறைப்படுத்தி, விரிவுபடுத்தி வருகின்றன. உதாரணமாக, Tanishq நிறுவனம் கடந்த ஒன்பது மாதங்களில் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளை மாற்றி புதிய நகைகள் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் சுமார் 11,000 கிலோ தங்கம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், Popley Group நிறுவனத்தின் விற்பனையில் சுமார் 70% முதல் 75% வரை வாடிக்கையாளர் பரிமாற்றங்கள் மூலம் நடைபெறுவதாகக் கூறுகின்றனர். இதன் மூலம், பழைய கனமான நகைகளை மாற்றி புதிய டிசைன்கள் அல்லது பணமாக்கக்கூடிய பிற நிதிப் பொருட்களாக மாற்றிக் கொள்ளவும், அதே சமயம் நகைக்கடைகளுக்கு மறுசுழற்சி செய்யக்கூடிய தங்கம் கிடைக்கவும் வழிவகை செய்கிறது.
வணிக மற்றும் ஒழுங்குமுறை பார்வைகள்
வணிக ரீதியாகப் பார்க்கும்போது, நகைக்கடைகள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களை 22 காரட் தங்கத்திலிருந்து 18 காரட் போன்ற தற்கால டிசைன்களுக்கு மாற்றுவதன் மூலம் பயனடைகின்றன. இது தங்கத்தின் கலப்படம் மற்றும் ஹால்மார்க்கிங் தரநிலைகள் குறித்த வெளிப்படைத்தன்மையை கோருகிறது.
ஆனால், ஒழுங்கமைக்கப்பட்ட தங்க மறுசுழற்சி அதிகரிப்பு சில ஒழுங்குமுறை சிக்கல்களையும் எழுப்பியுள்ளது. முன்னாள் CBDT தலைவர் R. Prasad குறிப்பிட்டுள்ளபடி, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான அதிக சுங்க வரிகள், சட்டவிரோதமாக கடத்தப்படும் தங்கத்தை மறுசுழற்சி அமைப்பு மூலம் வெள்ளைப் பணமாக மாற்ற ஊக்கமளிக்கலாம். பெரிய நகைக்கடைகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டாலும், மறுசுழற்சி நடவடிக்கைகளின் அளவைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட தங்கத்தின் மூலத்தைக் கண்காணிக்க ஒழுங்குமுறை ஆணையங்கள் தீவிரமாக உள்ளன. மேலும், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் காப்பீட்டு செலவுகள் இல்லாமல் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் பணிபுரியும் நிபுணர்களிடையே ETF போன்ற பேப்பர் கோல்ட் (Paper Gold) கருவிகளும் பிரபலமடைந்து வருகின்றன.
