ஐரோப்பிய ஒன்றியம் மெட்டல் ஸ்கிராப் ஏற்றுமதிக்கு தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. 2027 மே மாதத்திற்குள் இந்த தடை அமலுக்கு வந்தால், இந்தியாவுக்கு மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஐரோப்பிய ஆணையம் (European Commission) மெட்டல் ஸ்கிராப் எனப்படும் உலோகக் கழிவுகளை இந்தியா போன்ற OECD அல்லாத நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை வரும் மே 21, 2027 முதல் கட்டுப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. பேப்பர் மற்றும் துணிகள் போன்ற கழிவுப் பொருட்களுக்கு அனுமதி இருந்தாலும், உலோகக் கழிவுகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட உள்ளது. லெட், மெர்குரி மற்றும் காட்மியம் போன்ற உலோகங்களை கையாள்வதில் இந்தியாவின் தற்போதைய தரநிலைகள் ஐரோப்பாவின் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பதே இந்தத் தடையின் முக்கியக் காரணம்.
இந்திய ரீசைக்கிளிங் நிறுவனங்களுக்கு சவால்
இந்தத் திட்டம் இந்தியாவிலுள்ள செகண்டரி மெட்டல் துறையை கடுமையாக பாதிக்கும். இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான Gravita India மற்றும் Pondy Oxides & Chemicals ஆகியவை தங்களது செயல்பாடுகளுக்கு ஐரோப்பிய ஸ்கிராப் இறக்குமதியையே பெருமளவு நம்பியுள்ளன. புள்ளிவிவரங்களின்படி, 2025-ல் மட்டும் இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து சுமார் 366,000 டன் அலுமினிய ஸ்கிராப்பை இறக்குமதி செய்துள்ளது. இந்தத் தடை உறுதியானால், மாற்று ஆதாரங்களைத் தேடுவதும் அல்லது உள்நாட்டு மூலப்பொருள் கட்டமைப்பை வலுப்படுத்துவதும் நிறுவனங்களுக்கு உடனடித் தேவையாக மாறும்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது
ஐரோப்பிய விநியோகம் நிறுத்தப்பட்டால், மற்ற நாடுகளிலிருந்து ஸ்கிராப் வாங்குவதற்கான லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் அதிகரிக்கும். இது நிறுவனங்களின் மார்ஜினை (Margin) பாதிக்கலாம். ஒருவேளை உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்ய உள்ளூரிலேயே ஸ்கிராப் வாங்கினால், விலை உயர்வு காரணமாக செலவு அதிகரிக்கலாம்.
முக்கிய காலக்கெடு
இந்தத் திட்டம் இன்னும் சட்டமாக மாறவில்லை. அக்டோபர் 2026 வரை மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வு நடைபெறும். நவம்பர் 21, 2026 அன்று இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். இந்தியா தனது சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை தரநிலைகளை சர்வதேச அளவிற்கு உயர்த்தினால், இந்தத் தடையிலிருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது. தற்போதுள்ள நிலையில், இந்த விவகாரம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து தனித்தே கையாளப்படுகிறது.
