மோசடியைத் தடுக்க RBI-யின் 'Golden Hour'
RBI-யின் இந்த யோசனைக்கு முக்கிய காரணம், அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் தான். அறிக்கைகளின்படி, 2025-ல் மட்டும் சுமார் 2.8 மில்லியன் டிஜிட்டல் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஏற்பட்ட இழப்பு ₹22,931 கோடி-க்கும் மேல்! குறிப்பாக, ₹10,000-க்கு மேலான பெரிய தொகைப் பரிமாற்றங்கள்தான் 98.5% பண இழப்புக்கு காரணமாக அமைந்துள்ளன. இந்த 1 மணி நேர தாமதம், வாடிக்கையாளர்கள் சந்தேகத்திற்கிடமான பரிமாற்றங்களைச் சரிபார்த்து, ரத்து செய்ய ஒரு 'golden hour' கொடுக்கும் என RBI கருதுகிறது. IMPS போன்ற தளங்களிலும் இது பொருந்தும்.
உடனடி சேவை பாதிக்குமா?
ஆனால், UPI-யின் முக்கிய பலமே அதன் உடனடி (Instant) பரிமாற்ற சேவைதான். இந்த 1 மணி நேர தாமதம், UPI-யின் வேகத்திற்கும் எளிமைக்கும் பெரும் தடையாக அமையும் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பல நிபுணர்கள், இந்த பரவலான தாமதம், மோசடி செய்பவர்களுக்கு மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் வழிவகுக்கும் என்கின்றனர். Stripe Radar போன்ற சர்வதேச நிறுவனங்கள், AI மற்றும் மெஷின் லேர்னிங் பயன்படுத்தி, பரிமாற்றங்களை நிறுத்தாமல் மோசடியைக் கண்டறிகின்றன. ஆனால் RBI-யின் இந்த அணுகுமுறை, பயனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என விமர்சிக்கப்படுகிறது.
மோசடி செய்பவர்களின் புதிய தந்திரங்கள்
மோசடி செய்பவர்கள் இந்த 1 மணி நேர தாமதத்தை எளிதாகத் தாண்டிவிட முடியும் என்றும் கூறப்படுகிறது. உதாரணமாக, பயனர்களை தங்கள் எண்ணங்களை Whitelist செய்ய வைப்பது அல்லது சாதனங்களை ரிமோட் ஆக அணுகுவது போன்ற முறைகள் மூலம் மோசடி செய்யப்படலாம். மேலும், UPI-யின் முக்கிய அடையாளங்களான எளிமையான பயன்பாடு, அதிவேகம் போன்றவை பாதிக்கப்படலாம். இது மக்களை மீண்டும் பணப் பயன்பாட்டிற்கோ அல்லது மெதுவான பரிமாற்றங்களுக்கோ தள்ளக்கூடும். UPI சந்தையில் 80%-க்கும் மேல் இரண்டு முக்கிய நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த தாமதம் சிறு வணிகங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மாற்று வழிகள் என்ன?
வங்கி மற்றும் ஃபின்டெக் துறையினர், மோசடிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், ₹10,000 என்ற வரம்பை ₹25,000 அல்லது அதற்கு மேல் உயர்த்தலாம் என்றும், சாதனத் தரவு (Device Data), இருப்பிடம், பயனர் நடத்தை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இடர்-சார்ந்த (Risk-based) முறைகளைப் பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர். இது உண்மையான ஆபத்து உள்ள பரிமாற்றங்களை மட்டுமே குறிவைக்கும். Digio-வை சேர்ந்த Abhinav Parashar, Aryaa Advisors-ன் Nitesh Singhal, Zaggle-ன் Raj P Narayanam போன்றவர்கள் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இந்த அறிவிப்பு ஒரு விவாதப் பத்திரமாக (Discussion Paper) இருப்பதால், மே 8 வரை பொதுமக்களின் கருத்துக்களை RBI வரவேற்றுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் வேகத்திற்கும் பாதுகாப்பிற்கும் இடையிலான சவாலான சமநிலையைக் காட்டுகிறது.