கடன் வசூல் இனி கண்டிப்புடன்!
கடன் வாங்கியவர்களிடம் அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் போன்ற மோசமான முறைகளில் கடன் வசூல் செய்வதாக எழுந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரிசர்வ் வங்கி புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, மூன்று முக்கிய வரைவு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இவை, நிதி தயாரிப்புகள் தவறாக விற்பனை செய்யப்படுவது (mis-selling), கடன் வசூல் முகவர்களின் நடத்தை, மற்றும் அங்கீகரிக்கப்படாத எலக்ட்ரானிக் வங்கிப் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்களின் பொறுப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.
வாடிக்கையாளர் பாதுகாப்பு முக்கியம்!
தொடர் அழைப்புகள், அச்சுறுத்தல்கள், பொதுவெளியில் அவமானப்படுத்துதல் போன்ற கடன் வசூல் முறைகள் அதிகரித்து வருவதாக பல வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இனிமேல், இதுபோன்ற முறைகேடுகளுக்கு நிதி நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும். முகவர்கள் செயல்படும் நேரம், பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்த தற்போதைய விதிகள் இருந்தாலும், அவை சரியாகப் பின்பற்றப்படாததால் இந்த முறை RBI கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் மோசடிகளுக்கு நிவாரணம்
கடன் வசூல் மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தாத கடன், இன்சூரன்ஸ் அல்லது முதலீட்டுத் திட்டங்களை வற்புறுத்தி விற்கும் (mis-selling) முறைகளுக்கும் கட்டுப்பாடு கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நிகழும் சிறிய அளவிலான மோசடிகளால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு ₹25,000 வரை இழப்பீடு வழங்கும் ஒரு கட்டமைப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது ஆன்லைன் மோசடிகளைப் பற்றி அதிகம் அறியாத பயனர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும்.
மேலும், டிஜிட்டல் பேமெண்ட் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் RBI ஒரு விவாதக் கட்டுரை (discussion paper) வெளியிட உள்ளது. இதில், மேம்படுத்தப்பட்ட அங்கீகாரம் (authentication) மற்றும் மூத்த குடிமக்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்குப் பணம் செலுத்துவதில் தாமதம் போன்ற அம்சங்கள் இடம்பெறலாம்.