இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 22 வருடங்களுக்குப் பிறகு, நகர கூட்டுறவு வங்கிகள் (Urban Co-operative Banks - UCBs) தொடங்குவதற்கான உரிமம் வழங்கும் முறையை மீண்டும் தொடங்கியுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் இனி ₹300 கோடி குறைந்தபட்ச மூலதனம் மற்றும் கடுமையான சொத்து தர சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும். இதன் மூலம், நிதி நிலைத்தன்மை கொண்ட நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் நுழைய முடியும்.
22 வருட காத்திருப்புக்கு பிறகு RBI அதிரடி
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு, புதிய நகர கூட்டுறவு வங்கிகள் (UCBs) தொடங்குவதற்கான உரிமம் வழங்கும் முறையை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இது கூட்டுறவு வங்கித் துறையை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவாகும். குறிப்பாக, பெரிய வணிக வங்கிகள் சென்றடையாத வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட இந்தத் துறைக்கு, 'ஆன்-டாப்' (on-tap) உரிம முறையின் மூலம், பெரிய மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்க ரிசர்வ் வங்கி விரும்புகிறது.
கண்டிப்பான நிபந்தனைகள் அமல்
இந்த முறை, சிறு மற்றும் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு இடமில்லை என RBI திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புதிய வங்கிகள் தொடங்க விண்ணப்பிப்பவர்கள், குறைந்தது ₹300 கோடி மூலதனத்தை வைத்திருக்க வேண்டும். மேலும், கடன்களில் வாராக்கடன் (Net Non-Performing Asset - NPA) விகிதத்தை 3% க்குக் கீழ் வைத்திருக்க வேண்டும். கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு, தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
நிர்வாகத் திறனுக்கு முக்கியத்துவம்
மூலதனத் தேவைகள் மட்டுமல்லாமல், நிர்வாகத் திறனுக்கும் RBI அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. விண்ணப்பிக்கும் வங்கிகளின் இயக்குநர் குழு உறுப்பினர்களின் 'தகுதி மற்றும் நேர்மை' (fit and proper) குறித்து RBI விரிவான ஆய்வு மேற்கொள்ளும். வங்கித் துறையில் போதிய அனுபவம் இல்லாதவர்கள் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க, எந்தவொரு உறுப்பினரும் 5% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சந்தைப் போட்டி
2004 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இன்றைய வங்கிச் சூழல் மிகவும் மாறிவிட்டது. புதிய UCBக்கள், சிறுநிதி வங்கிகள் (Small Finance Banks - SFBs), ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளுடன் நேரடியாகப் போட்டியிட வேண்டியிருக்கும். தற்போது கூட்டுறவுத் துறை சுமார் ₹7.38 லட்சம் கோடி சொத்துக்களைக் நிர்வகித்தாலும், அதிக தொழில்நுட்பம் கொண்ட இந்த போட்டி நிறைந்த சந்தையில் லாபகரமாக செயல்படுவதை நிரூபிக்க வேண்டும்.
கடந்தகால தவறுகளைத் தவிர்க்கும் முயற்சி
2004 ஆம் ஆண்டு உரிமம் வழங்கப்பட்ட பல வங்கிகள் நிதி ரீதியாக பலவீனமாக இருந்ததே, அன்று உரிமம் வழங்கல் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். அந்தத் தவறை மீண்டும் செய்யாமல் இருக்க, RBI தற்போது மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படுகிறது. விண்ணப்பங்களின் தரம் மற்றும் இறுதி உரிமம் பெறும் வங்கிகளின் எண்ணிக்கை ஆகியவை சந்தை உன்னிப்பாகக் கவனிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
