நிறுவனங்களுக்கான புதிய மூலதனத் தேவைகள்
டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை வழங்கும் வங்கி அல்லாத நிறுவனங்களுக்கு, இனி கணிசமாக அதிக மூலதனத் தேவை இருக்கும். ஆரம்ப அங்கீகாரத்திற்கு குறைந்தபட்சம் ₹5 கோடி நிகர மதிப்பு (Net Worth) தேவைப்படும். இந்தத் தொகை, அங்கீகாரம் பெற்று 3 ஆண்டுகளுக்குள் ₹15 கோடியாக அதிகரிக்கப்பட வேண்டும். இது டிஜிட்டல் பேமென்ட் ஆபரேட்டர்களிடையே நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பரிவர்த்தனை மற்றும் இருப்பு வரம்புகள்
முழு KYC (Know Your Customer) செய்யப்பட்ட PPI வாலெட்களில், இனி ₹2 லட்சம் வரை இருப்புத் தொகையை வைத்திருக்கலாம். மாதந்தோறும் நடைபெறும் பணப் பரிமாற்றங்களுக்கு (Debit) குறிப்பிட்ட வரம்பு உண்டு. நண்பர்களுக்குப் பணம் அனுப்பும் (Peer-to-peer) பரிவர்த்தனைகளுக்கு மாதத்திற்கு ₹25,000 என உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாலெட்களில் ரொக்கமாகப் பணம் நிரப்பும் (Cash Loading) அளவு ஒரு பரிவர்த்தனைக்கு ₹10,000 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிய PPI-களுக்கான கட்டுப்பாடுகள்
குறைந்தபட்ச KYC தேவைப்படும் 'ஸ்மால் PPI' கருவிகள் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் இருக்கும். இவற்றில் அதிகபட்சமாக ₹10,000 மட்டுமே இருப்பு வைக்க முடியும். முக்கியமாக, இந்த வாலெட்களில் இருந்து மற்றவர்களுக்குப் பணம் அனுப்பவோ அல்லது பணத்தை திரும்பப் பெறவோ (Fund Transfers or Withdrawals) முடியாது. அடிப்படைப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இவை பயன்படும்.
இணைப்பு வசதி (Interoperability) மற்றும் பயன்பாடு
முழு KYC செய்யப்பட்ட PPI வாலெட்களில், இனி வெவ்வேறு தளங்களுக்கு இடையே தடையின்றிப் பரிவர்த்தனை செய்ய இணைப்பு வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அல்லது அங்கீகரிக்கப்பட்ட கார்டு நெட்வொர்க்குகள் மூலம் சாத்தியமாகும். இருப்பினும், சர்வதேச அளவில் (Cross-border) PPI-களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
வாடிக்கையாளர் பாதுகாப்பு நடவடிக்கைகள்
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்டணங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்த அனைத்துத் தகவல்களும் தெளிவாக, முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். புகார்களைத் தீர்ப்பதற்கான (Grievance Redressal) வலுவான அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், RBI-யின் ஒருங்கிணைந்த ஓம்புட்ஸ்மேன் திட்டத்தையும் (Integrated Ombudsman Scheme) அனைத்து PPI நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். பணத்தைத் திரும்பப் பெறும் (Refunds) சமயங்களில், நிர்ணயிக்கப்பட்ட இருப்பு வரம்புகளை மீறினாலும், உடனடியாக வாடிக்கையாளர் வாலெட்டிலேயே பணம் வரவு வைக்கப்படும்.
செயல்பாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள்
வங்கி அல்லாத நிறுவனங்கள், கண்டிப்பாகச் சிறப்பு வங்கிகளில் (Scheduled Commercial Banks) தனி எஸ்க்ரோ கணக்குகளை (Escrow Accounts) வைத்திருக்க வேண்டும். இந்த கணக்குகளில் உள்ள இருப்புகளுக்கும், நிலுவையில் உள்ள பொறுப்புகளுக்கும் (Liabilities) இடையே தினசரி கணக்கு ஒப்பீடு (Daily Reconciliation) செய்யப்பட வேண்டும். ஒரு வருடம் செயலற்ற நிலையில் (Inactivity) இருக்கும் PPI-கள் செயலிழக்கச் செய்யப்படும் (Deactivated). மேலும் ஒரு வருடம் கழித்தும் செயல்படுத்தப்படாவிட்டால், அவை மூடப்பட்டு, மீதமுள்ள இருப்புத் தொகை வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கே திருப்பி அனுப்பப்படும்.
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில், புதுமைகளையும் நிதி ஸ்திரத்தன்மையையும் சமநிலைப்படுத்த, RBI இந்த பரந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், டிஜிட்டல் பேமெண்ட் அமைப்பை மேலும் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் மாற்ற ரிசர்வ் வங்கி இலக்கு வைத்துள்ளது.
