சிறு, குறு தொழில் துறையில் (MSE) கடன் புழக்கத்தை கணிசமாக அதிகரிக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதன்படி, கடன் வாங்குபவர்கள் தாமாக முன்வந்து அடகு வைக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான (MSE) கடன்களுக்கு, அனுமதிக்கப்பட்ட பிணையமில்லா (collateral-free) கடன் தொகை வரம்பு வரை ஏற்றுக்கொள்ள வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், கடன் விதிமுறைகள் மீறப்படுவதாகக் கருதப்படாது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, கடன் வழங்குபவர்கள் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா (collateral-free) கடன்களை வழங்க வேண்டும். வங்கிகள் தங்கள் உள் கடன் கொள்கைகள் மற்றும் வாடிக்கையாளரின் நிதி நிலையைப் பொறுத்து, இந்த பிணையமில்லா தொகையை ₹25 லட்சம் வரை உயர்த்தவும் அதிகாரம் பெற்றுள்ளன. பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் வழங்கப்படும் கடன்களுக்கும் இது பொருந்தும்.
மேலும், சாத்தியமான இடர்களைக் குறைக்க, கடன் உத்தரவாதத் திட்டத்தின் (Credit Guarantee Scheme) கீழ் பலன்களைப் பெற வங்கிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள சிறு, குறு தொழில் துறையின் மீது, இந்த கொள்கை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். RBI தரவுகளின்படி, டிசம்பர் 2025 இறுதி நிலவரப்படி, MSE துறையில் நிலுவையில் உள்ள கடன் ₹10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 30% வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர்ச்சியான வளர்ச்சி, இத்துறை நிதி அமைப்பை சார்ந்துள்ளதையும், அதற்கு பங்களிப்பதையும் காட்டுகிறது.