சந்தை திடீரென சரியும்போது, Loan Against Shares (LAS) மூலம் வாங்கிய கடனில் உள்ள உங்கள் பங்குகள் என்னவாகும்? கடனளிப்பவர்கள் விதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளால், சிறிய சரிவு கூட உங்கள் பங்குகளை வலுக்கட்டாயமாக விற்று, லாபத்தை இழப்பாக மாற்றும் அபாயம் உள்ளது.
கடனை நம்பி வாங்கிய பங்குகள் - ஏன் சிக்கலில்?
முதலீடு செய்துள்ள பங்குகளை விற்காமலேயே கடன் பெறும் வசதிதான் Loan Against Shares (LAS). இது லாபகரமானது போல தோன்றினாலும், உண்மையில் இது உங்கள் பங்கு போர்ட்ஃபோலியோவை ஒரு மார்ஜின் அக்கவுண்ட் போல மாற்றிவிடும். இதில் உள்ள ஆபத்து, கணக்கீடுகளிலேயே ஒளிந்துள்ளது. Loan-to-Value (LTV) விகிதத்தை நீங்கள் உச்சபட்சமாக பயன்படுத்தும்போது, சந்தையில் ஏற்படும் சிறு விலை மாற்றங்கள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
கட்டாயமாக விற்கும் நிலை - எப்படி நிகழ்கிறது?
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், ரிஸ்க் மேனேஜ்மென்ட் விதிகளின்படி செயல்படுகின்றன. குறிப்பிட்ட LTV வரம்பை தாண்டும்போது, அவர்கள் தானாகவே அடமானம் வைத்திருக்கும் பங்குகளை விற்றுவிடுவார்கள். சந்தையில் வீழ்ச்சி ஏற்படும்போது, பங்குகளின் மதிப்பு குறைகிறது, ஆனால் நீங்கள் வாங்கிய கடன் தொகை அப்படியே இருக்கும். இதனால், உங்களுக்கு உடனடியாக மார்ஜின் கால் (Margin Call) வரும். அதாவது, கூடுதல் பணம் அல்லது பங்குகளை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (பெரும்பாலும் 24 மணி நேரம்) இதை செய்யாவிட்டால், சந்தையின் மோசமான சூழலில் உங்கள் பங்குகள் விற்கப்படும். இதனால் விலை மேலும் குறைந்து, மற்ற கணக்குகளுக்கும் மார்ஜின் கால் வரலாம்.
நிறுவனங்களின் அணுகுமுறை - ஆபத்துகள் என்ன?
LAS ஒப்பந்தங்கள் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருப்பதில்லை. வங்கிகள், ஒவ்வொரு பங்கின் ரிஸ்க் அடிப்படையில் 'Haircut' தொகையை மாற்றியமைக்கலாம். ஒரு பங்கு 50% LTV-க்கு தகுதி பெற்றிருந்தாலும், சந்தை சரியும்போது அதன் மதிப்பு குறைக்கப்பட்டு, நீங்கள் மார்ஜின் கால் செலுத்த வேண்டிய நிலை வரலாம். மேலும், சந்தை சரியும்போது, முதலீட்டாளரின் நீண்ட கால இலக்குகளை விட, நிறுவனங்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தும். தானியங்கி வர்த்தக அமைப்புகள் (Automated Systems) மூலம் பங்குகள் விற்கப்படும்போது, அந்த நிறுவனத்தின் தரம், உங்கள் முதலீட்டு நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொள்ளாது.
பணப்புழக்க ஆபத்தை சமாளிப்பது எப்படி?
கடனாக வாங்கிய பங்குகளை நிலையான முதலீடாக கருதாமல், சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டதாக கருத வேண்டும். LTV விகிதத்தை 25% அல்லது அதற்கும் குறைவாக வைத்திருப்பது, பெரிய சந்தை வீழ்ச்சியைக் கூட தாங்கும் அளவுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும். அதிக பணப்புழக்கம் உள்ள பெரிய நிறுவனங்களின் பங்குகளை அடமானம் வைப்பது நல்லது. ஏனெனில், அவை ஒரே நாளில் அதிக சரிவை சந்திப்பது குறைவு. ஒரு குறிப்பிட்ட துறையின் பங்குகளில் மட்டும் அதிக முதலீடு செய்வது (Concentration Risk) ஆபத்தானது. சந்தை சரிந்தால், அனைத்து பங்குகளும் ஒரே நேரத்தில் விற்கப்படலாம். இதுபோன்ற ஆபத்துகளிலிருந்து தப்பிக்க, கடன் கணக்கிற்கு வெளியே ஒரு ரொக்க கையிருப்பை (Cash Reserve) வைத்திருப்பது அவசியம்.
