நிதித்துறையில் பெண்களின் பங்கேற்பு ஏன் குறைவு?
இந்தியாவில் டிஜிட்டல் வசதிகள் பெருகி, ஃபைனான்சியல் இன்க்ளூஷன் முயற்சிகள் நடந்தாலும், ஒரு பெரிய முரண்பாடு நிலவுகிறது. வங்கிகள், ஃபைனான்சியல் சர்வீசஸ், இன்சூரன்ஸ் (BFSI) துறையில் பெண்கள் மிகவும் நம்பகமான, ஒழுக்கமான வாடிக்கையாளர்களாக இருந்தும், பல முக்கிய ஃபைனான்ஸ் ப்ராடக்ட்களில் அவர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. RedSeer Strategy Consultants வெளியிட்டுள்ள "Designing for Her: Unlocking Women's FinTech Adoption in India" என்ற அறிக்கை, இதன் முக்கியப் பிரச்சனை அணுகல் (Access) இல்லாமையல்ல, மாறாக, ஃபைனான்ஸ் ப்ராடக்ட்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதில் (Adoption) உள்ள தாமதம் அல்லது சிக்கலே காரணம் என்கிறது. இந்த பெரிய இடைவெளி, நிதி நிறுவனங்களுக்கு ஒரு சவாலான, அதே சமயம் மகத்தான சந்தை வாய்ப்பாக உள்ளது.
புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
RedSeer அறிக்கையின் புள்ளிவிவரங்கள் இந்த ஏற்றத்தாழ்வை தெளிவாகக் காட்டுகின்றன. பெண்கள் தனிநபர் கடன்களில் (Personal Loans) வெறும் 17% மட்டுமே செயலில் உள்ளவர்களாகவும், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களில் 13% ஆகவும் உள்ளனர். மியூச்சுவல் ஃபண்டில் (Mutual Fund) நிர்வகிக்கப்படும் சொத்துக்களில் (Assets Under Management) 34% மற்றும் புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் (Life Insurance Policies) 27% மட்டுமே பெண்களின் பங்களிப்பு உள்ளது.
ஆச்சரியம் என்னவென்றால், பெண்கள் கடன் திருப்பிச் செலுத்துவதில் ஆண்களை விட சிறந்தவர்களாக இருக்கிறார்கள். கடன் தவணை தவறும் விகிதம் (Delinquency Rate) ஆண்களுக்கு 2.2% ஆக இருக்கும்போது, பெண்களுக்கு இது 1.6% ஆக உள்ளது. மேலும், அவர்கள் புத்திசாலித்தனமாக கடன் வாங்குவதாகவும், சேமிப்பில் சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தடைகள் என்ன? டிசைன், நம்பிக்கை, டிஜிட்டல் இடைவெளி
பெரும்பாலான ஃபைனான்ஸ் ப்ராடக்ட்கள் ஆண்களின் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு, பின்னர் பெண்களுக்காக மாற்றியமைக்கப்படுகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஆண் மைய சூழல் (Male-centric ecosystem) சிரமங்களை ஏற்படுத்துகிறது. பெண்கள் நிதி முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, பெரும்பாலும் தங்கள் சமூகம் மற்றும் குடும்பத்தினரின் ஆலோசனையை நாடுகிறார்கள். ஐந்து பெண்களில் நான்கு பேர் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்பதாகத் தெரிவிக்கின்றனர்.
புதிய ஃபைனான்ஸ் ப்ராடக்ட்களைப் பற்றி சிந்திக்கும்போது 54% பெண்களுக்கு போதுமான தகவல் இல்லாததே முக்கியத் தயக்கமாக உள்ளது. மேலும், இந்தியாவில் டிஜிட்டல் ஃபைனான்ஸ் துறை வளர்ந்திருந்தாலும், பெண்கள் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதில் இன்னும் தடைகளை எதிர்கொள்கின்றனர். பெண்களிடையே இணையப் பயன்பாடு வளர்ந்திருந்தாலும் (47% பயனர்கள், இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு 20% ஆக இருந்தது), தரவு தனியுரிமை (Data Privacy) மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் தொடர்கின்றன. தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல் இல்லாததும் ஒரு பிரச்சனை.
டிஜிட்டல் பேமென்ட் பயன்பாடு வளர்ந்து வருகிறது (38% கிராமப்புற மற்றும் அரை-நகர்ப்புற பெண்கள் UPI-ஐ வாரந்தோறும் பயன்படுத்துகின்றனர்), ஆனால் முறையான சேமிப்பு (Formal Savings) பயன்பாடு குறைவாக உள்ளது. முறையான ஃபைனான்சியல் நிறுவனங்கள் மூலம் சேமிப்பவர்கள் 32% மட்டுமே.
மகத்தான வாய்ப்பும், மாறும் சூழலும்
இந்தக் குறைவான பயன்பாடு ஒரு மிகப்பெரிய சந்தை வாய்ப்பை மறைக்கிறது. இந்தியாவில் சுமார் 75 மில்லியன் டிஜிட்டல் முறையில் சுறுசுறுப்பான வேலை செய்யும் பெண்கள் உள்ளனர். இவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஃபைனான்ஸ் ப்ராடக்ட்கள் மூலம் தோராயமாக ₹2,00,000 கோடி (சுமார் $2.8 டிரில்லியன் USD) சொத்துக்களை நிர்வகிக்கும் வாய்ப்பு உள்ளது.
பெண்களின் வேலைவாய்ப்பு அதிகரிப்பு மற்றும் நிதி சுதந்திரம் வளர்ந்து வருவதால், தேவை அதிகரித்து வருகிறது. மார்ச் 2024 நிலவரப்படி, மியூச்சுவல் ஃபண்டில் உள்ள சொத்துக்களில் பெண்களின் பங்கு 21% ஆக அதிகரித்துள்ளது (மார்ச் 2017-ல் 15% ஆக இருந்தது). பங்குச் சந்தையிலும் அவர்களின் பங்களிப்பு உயர்ந்து வருகிறது; ஒவ்வொரு நான்கு புதிய முதலீட்டாளர்களில் ஒரு பெண் முதலீட்டாளராக உள்ளார்.
ஃபிண்டெக் (Fintech) நிறுவனங்கள், நம்பிக்கை மற்றும் பொருத்தமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைக்க முயற்சி செய்கின்றன. பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY) மற்றும் பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) போன்ற திட்டங்கள், பெண் தொழில்முனைவோருக்கு கணக்குகளை அணுகுவதற்கும், கடன் இல்லாத நிதி உதவிக்கும் உதவியுள்ளன. நவம்பர் 2023 வரை, ஸ்டாண்ட்-அப் இந்தியா கடன்களில் 84% பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சவால்கள் இன்னும் நீடிக்கின்றன
இந்த நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும், அமைப்பு ரீதியான சவால்கள் பெரிதாகவே உள்ளன. ப்ராடக்ட்கள் பெண்களுக்காக வடிவமைக்கப்படாமல், மாற்றியமைக்கப்படுவது ஒரு தொடர்ச்சியான பிரச்சனை. இது பொருத்தமின்மை மற்றும் நம்பிக்கை குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது, குறிப்பாக அதிக மதிப்புள்ள ப்ராடக்ட்களை ஏற்றுக்கொள்வதில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக, பெண் தொழில்முனைவோர் கடன் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களில் சுமார் 10% மட்டுமே முறையான கடன் பெறுகிறார்கள். கடன் வரலாறு மற்றும் வணிக அனுபவம் குறைவாக இருப்பதாக கடன் வழங்குபவர்கள் கருதுவது, பெண்களை மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளுகிறது.
சமூக விதிமுறைகள், குறைந்த ஃபைனான்சியல் லிட்டரசி (வெறும் 21% பெண்கள் மட்டுமே நிதி அறிவு பெற்றவர்கள்), மற்றும் போதுமான ஈடு (Collateral) இல்லாதது போன்றவையும் முக்கியத் தடைகளாக உள்ளன. டிஜிட்டல் இடைவெளியும் தொடர்கிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்தாலும், ஃபைனான்சியல் சேவைகளை ஏற்றுக்கொள்வதில், செயலிகளைப் பற்றிய அறிமுகமின்மை, ஆன்லைன் மோசடி பயம், நிலையற்ற இணைப்பு போன்றவை தடைகளாக உள்ளன. கடன் மதிப்பீட்டின் போது மறைமுகமான பாரபட்சங்கள், தனிப்பட்ட கேள்விகள் போன்றவையும் பெண்களுக்கான "நிதி கண்ணாடி கூரை"யை (funding glass ceiling) வலுப்படுத்துகின்றன. மேலும், பல ஃபைனான்சியல் அளவீடுகளில் பாலின-பிரித்தறியப்பட்ட தரவுகள் (gender-disaggregated data) இல்லாததால், கொள்கை வகுப்பாளர்கள் பெண்களுக்கு ஏற்ற உத்திகளை உருவாக்குவது கடினமாக உள்ளது.
ஏற்றுக்கொள்வதை நோக்கிய பயணம்
BFSI நிறுவனங்களுக்கு, ஆண் மைய "அணுகல்" மாதிரியிலிருந்து, குடும்ப மைய "ஏற்றுக்கொள்ளும்" (adoption) வியூகத்திற்கு மாற வேண்டும். இதற்கு நம்பிக்கை மற்றும் பொருத்தமான தீர்வுகளை வழங்கும் விதத்தை அடிப்படை ரீதியாக மறுவடிவமைக்க வேண்டும்.
தகவல் இடைவெளிகளை நிரப்புவது, பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துவது, உள்ளுணர்வுடன் கூடிய, பாதுகாப்பான டிஜிட்டல் தளங்கள் மூலம் நம்பிக்கையை வளர்ப்பது ஆகியவை மிக அவசியம். இந்த ஏற்றுக்கொள்ளும் தடைகளை வெற்றிகரமாகத் தாண்டி, உண்மையாகவே அனைவரையும் உள்ளடக்கிய, பெண்கள் மையப்படுத்திய ஃபைனான்ஸ் பயணங்களை உருவாக்கும் நிதி நிறுவனங்கள், ஒரு பெரிய மற்றும் விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தைப் பெற முடியும். இது எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.