இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் மோசடிகள் கொடிகட்டிப் பறக்கின்றன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, ரிசர்வ் வங்கி (RBI) ஒரு புதிய யோசனையை முன்வைத்துள்ளது. அதன்படி, ₹10,000க்கு மேல் நடக்கும் கணக்குக்கு-கணக்கு (account-to-account) டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஒரு மணிநேரம் தாமதப்படுத்தி அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.
இந்த யோசனைக்கு பெரும்பாலான இந்திய வங்கிகள் கொள்கை அளவில் (in principle) ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், தாமதத்திற்கான வரம்பை (limit) ₹10,000ல் இருந்து ₹25,000 ஆக உயர்த்த வேண்டும் என்று RBIயிடம் வலியுறுத்தி வருகின்றன. ₹10,000 வரம்பு, அன்றாட சாதாரண பரிவர்த்தனைகளுக்கு இடையூறாக அமைந்துவிடும் என்றும், இது பயனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் வங்கிகள் கவலை தெரிவிக்கின்றன.
ஏனெனில், டிஜிட்டல் மோசடிகளால் ஏற்படும் பண இழப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மோசடி சம்பவங்களின் மதிப்பு சுமார் 41 மடங்கு உயர்ந்து, ஏறத்தாழ ₹23,000 கோடியை எட்டியுள்ளது. RBIயின் தரவுகளின்படி, ₹10,000க்கு மேலான பரிவர்த்தனைகள், மோசடி எண்ணிக்கையில் சுமார் 45% ஆக இருந்தாலும், அதன் மதிப்பில் கிட்டத்தட்ட 98.5% ஆக உள்ளது. இது, உடனடி நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது.
வங்கிகள், ஒரு மணிநேரத்திற்கும் மேலான தாமதங்கள் அல்லது கணக்குகளை 'whitelisting' செய்வதில் உள்ள சிக்கல்கள் போன்ற செயல்பாட்டுப் பிரச்சனைகளையும் (operational issues) சுட்டிக்காட்டியுள்ளன. எனினும், RBI தரப்பில், இந்த விவாதப் பத்திரம் (discussion paper) என்பது வெறும் கருத்து கேட்பதற்கான யோசனை மட்டுமே என்றும், இறுதி முடிவு பங்குதாரர்களின் (stakeholders) கருத்துக்களின் அடிப்படையிலேயே எடுக்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது. முன்னாள் RBI துணை கவர்னர் டி. ரபி சங்கர் இதுகுறித்து பேசுகையில், முக்கிய நோக்கம் மோசடிகளைக் குறைப்பதுதான், இந்த நிலையில் புதிய கொள்கையை உருவாக்குவதல்ல என்று தெரிவித்தார்.
தற்போதைய சூழலில், உடனடிப் பரிவர்த்தனைகளே சிறந்தவை என்றாலும், அபாயங்களைக் கட்டுப்படுத்த ஒரு திட்டமிட்ட தாமதம் தேவைப்படலாம் என மூத்த வங்கி அதிகாரிகள் நம்புகின்றனர். எனவே, சரியான வரம்பை நிர்ணயிப்பது குறித்த விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. ₹10,000 என்ற வரம்பு சரியா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் அமைப்பை மெதுவாக்காமல், அபாயத்தைக் குறைப்பதே இதன் முக்கிய இலக்காகும்.
