இந்திய வங்கிகள் இணைந்து 'Project Finance' வழங்க புதிய பொதுவான விதிமுறைகளை உருவாக்கி வருகின்றன. இதன் மூலம் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான கடன் மதிப்பீட்டில் உள்ள குழப்பங்கள் நீங்கி, ரிஸ்க் மேலாண்மை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பல வங்கிகள் இணைந்து கடன் வழங்கும் போது (Consortium Lending), ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான மதிப்பீட்டு முறையைப் பின்பற்றுகின்றன. இதனால் ஒரு வங்கியில் அந்த கடன் 'நல்ல சொத்தாக' கருதப்படும்போது, மற்றொரு வங்கியில் 'ரிஸ்க் அதிகம்' என வகைப்படுத்தப்படுகிறது. இந்த குழப்பத்தை தவிர்க்கவே இப்போது வங்கிகள் ஒன்று கூடி புதிய பொதுவான விதிமுறைகளை வகுக்கத் தொடங்கியுள்ளன.
எதற்கெல்லாம் பொதுவான விதிமுறை?
திட்டத்தின் மொத்த செலவு (Total Capital Outlay), நிதியுதவி அளவு மற்றும் திட்டத்தின் காலம் (Gestation period) ஆகியவற்றை இனி பொதுவான அளவுகோலில் வங்கிகள் ஆய்வு செய்யப்போகின்றன. இது ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகளை மாற்றாது, மாறாக வங்கிகளுக்கு இடையிலான இணக்கத்தை மேம்படுத்தும்.
முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?
தற்போது, அக்டோபர் 2025 முதல் நடைமுறையில் உள்ள விதிகளின்படி, கட்டுமானத்தில் உள்ள பொதுவான திட்டங்களுக்கு 1% மற்றும் வணிக ரீதியான ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு 1.25% என வங்கிகள் கூடுதல் நிதி ஒதுக்கீடு (Provisioning) செய்ய வேண்டும். இந்த புதிய மாற்றத்தால், பேலன்ஸ் ஷீட்களில் (Balance Sheets) உள்ள மாறுபாடுகள் குறைந்து, சொத்துக்களின் தரம் துல்லியமாகத் தெரியும்.
கவனிக்க வேண்டிய ரிஸ்க்
இந்த கட்டுப்பாடு காரணமாக, இனி கடன் பெறுவதில் நிபந்தனைகள் கடுமையாக்கப்படலாம். முன்னதாக எளிதாக கடன் பெற்று வந்த பல திட்டங்கள், இனி கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஒட்டுமொத்த வங்கித் துறையிலும் சீரான கடன் தரம் இருப்பதை உறுதி செய்யவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
