சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விதிமீறல்களை குறைக்கவும் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவுகளில் புதிய 'கிரேடட் பெனால்டி பாயிண்ட்ஸ்' (Graded Penalty Points) முறையை அறிமுகப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, 66-வது SIAM வருடாந்திர மாநாட்டில் இந்த புதிய திட்டத்தை அறிவித்தார். இந்த புதிய முறையின் கீழ், போக்குவரத்து விதிமீறல்கள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட 'பாயிண்ட்ஸ்' வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது, சம்பந்தப்பட்ட நபரின் லைசென்ஸ் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படலாம்.
இன்சூரன்ஸ் துறையில் மாற்றம்
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், வாகன காப்பீடு (Motor Insurance) துறையில் பெரும் மாற்றம் ஏற்படும். ஒருவரின் ஓட்டுநர் வரலாற்றை வைத்து இன்சூரன்ஸ் பிரீமியத்தை நிர்ணயிக்கும் 'Behavior-based pricing' முறை அமலுக்கு வர வாய்ப்புள்ளது. இதன் மூலம், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு இன்சூரன்ஸில் தள்ளுபடி கிடைக்கும்.
அமலாக்கத்தில் உள்ள சவால்கள்
இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கு, அனைத்து மாநில போக்குவரத்து அதிகாரிகளையும் இணைக்கும் ஒரு வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு தேவைப்படுகிறது. தற்போதைய நிலையில், இதற்கான காலக்கெடு அல்லது தொழில்நுட்ப விவரங்களை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த திட்டத்தோடு சேர்த்து, அக்டோபர் 2027-க்குள் 'பாரத் NCAP 2.0' திட்டத்தையும், BS-IV வாகனங்களுக்கான எமிஷன் கண்ட்ரோல் கருவிகளையும் கொண்டுவர அரசு முனைப்பு காட்டி வருகிறது.
