உள்கட்டமைப்பு வளர்ச்சி - டயர் தேவைக்கு உத்வேகம்
மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட், குறிப்பாக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ₹12.2 லட்சம் கோடி தொகையை ஒதுக்கியுள்ளது. இது அடுத்த நிதியாண்டில் (2026-27) நாட்டின் சாலைகள், ரயில்வே, நகர்ப்புற போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் பெரிய அளவிலான பணிகளைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைப்லைன் திட்டங்கள், பயணிகள் வாகனங்கள் முதல் கனரக வர்த்தக வாகனங்கள் வரை அனைத்து பிரிவுகளிலும் டயர்களுக்கான தேவையை கணிசமாக உயர்த்தும். வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்போதும், புதிய வாகனங்கள் (fleet expansion) வாங்கும்போதும் டயர் உற்பத்தியாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள்.
ATMA தலைவர் அருண் மாமன் கூறுகையில், "உள்கட்டமைப்பு திட்டங்களின் வேகம், டயர் துறையின் வளர்ச்சியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த உயர்வான மூலதன செலவினங்கள், டயர்களுக்கான தேவையை உறுதி செய்யும்" எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மேம்படுத்தப்படும் போக்குவரத்து உள்கட்டமைப்பு, புதிய தேவைகளை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக அரங்கில் இந்திய டயர் நிறுவனங்கள்
உலகளவில் டயர் உற்பத்தியில், முதல் 20 நிறுவனங்களில் இந்தியாவில் இருந்து 4 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. MRF லிமிடெட் 13வது இடத்திலும், அப்பல்லோ டயர்ஸ் 14வது இடத்திலும், ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸ் 19வது இடத்திலும், CEAT நிறுவனம் 20வது இடத்திலும் உள்ளன. இது இந்திய நிறுவனங்களின் உலகளாவிய போட்டித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய டயர் தயாரிப்பு நிறுவனமான MRF-ன் சந்தை மதிப்பு சுமார் ₹56,000 கோடி. மார்ச் 2025-ல் முடிந்த நிதியாண்டில், அதன் ஏற்றுமதி வருவாய் ₹2,077 கோடியாக அதிகரித்துள்ளது. அப்பல்லோ டயர்ஸ் சந்தை மதிப்பு சுமார் ₹31,000 கோடி. CEAT நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ₹15,000 கோடி ஆகும். கடந்த காலாண்டில் (Q3 FY26) இதன் நிகர லாபம் (Net Profit) 60% உயர்ந்துள்ளது. ஜேகே டயர் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் சுமார் ₹15,000 கோடியை நெருங்குகிறது.
தொடரும் 'இன்வெர்டட் டியூட்டி' சிக்கல்
பட்ஜெட் அறிவிப்புகள் மகிழ்ச்சி அளித்தாலும், டயர் துறை ஒரு நீண்டகால பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. அதுதான் 'இன்வெர்டட் டியூட்டி ஸ்ட்ரக்சர்' (Inverted Duty Structure) ஆகும். அதாவது, டயர் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களான இயற்கை ரப்பர் போன்ற இறக்குமதிப் பொருட்களுக்கான சுங்க வரி (Import Duty), தயார் நிலையில் உள்ள இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கான சுங்க வரியை விட அதிகமாக இருப்பது.
இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் மலிவான டயர்களுடன் போட்டியிடுவது கடினமாகிறது. இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டும் என ATMA அமைப்பு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற 'இன்வெர்டட் டியூட்டி' உள்ள வரி செலுத்துவோருக்கு, 90% வரை தற்காலிக வரித் திரும்பப் பெறுவதற்கான (provisional refund) GST திருத்தங்கள் சில நிவாரணம் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த பிரச்சனைக்கு அரசு தீர்வு காணும் என அருண் மாமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.