நாடு முழுவதும் பரவும் அதீத வெப்பம்
இந்தியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கத்திற்கு மாறாக ஒரு பெரிய வெப்ப அலையுடன் தொடங்கியுள்ளது. நாட்டின் 36 முக்கிய நகரங்களில் 27 நகரங்களில், இந்த மாதத்தின் முதல் பாதியில் பகல்நேர வெப்பநிலை இயல்பு நிலையை விட கணிசமாக உயர்ந்துள்ளது. இது பகல் நேரங்களில் மட்டுமல்லாமல், 20 மாநிலங்களில் இரவிலும் 10 நாட்களுக்கு மேலாக இயல்புக்கு மாறான வெப்பம் பதிவாகியுள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, பிப்ரவரி மாதம் முழுவதும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்புக்கு அதிகமாகவும், மழை இயல்புக்கு குறைவாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக வட இந்திய பகுதிக்கு குளிரையும், மழையையும் கொண்டு வரும் மேற்கு இடையூறுகள் (Western Disturbances) இந்த முறை குறைவாகவே இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விவசாயம் சந்திக்கும் சவால்கள்
இந்த தொடர்ச்சியான வெப்பம், இந்தியாவின் முக்கிய ரபி (குளிர்கால பயிர்கள்) பயிர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. கோதுமை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளை முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்து, அவற்றின் விளைச்சலையும் தரத்தையும் குறைக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் முக்கிய தானியமான கோதுமை, அதன் தானியங்கள் நிரம்பும் பருவத்தில் வெப்பநிலை 2–3°C அதிகரித்தால் கூட, விளைச்சல் 10–15% வரை குறையக்கூடும். நிலைமை மிக மோசமானால், இழப்புகள் 20–25% வரை எட்டலாம். இதனால், தானியங்கள் முழு வளர்ச்சி அடையாமல், சுருங்கி, சந்தை மதிப்பை இழக்கும் அபாயம் உள்ளது. கடுகு போன்ற எண்ணெய் வித்துக்கள் மற்றும் கொண்டைக்கடலை, பயறு போன்ற பருப்பு வகைகளும் சீக்கிரமாக பூத்து, காய்கள் சரியாக உருவாகாமல் போகும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி போன்ற காய்கறி பயிர்களும் அவற்றின் வளர்ச்சிப் பருவத்தில் பாதிக்கப்படலாம்.
பொருளாதாரம் மற்றும் பூச்சி தாக்குதல் அபாயம்
விவசாயத்தில் ஏற்படும் இந்த பாதிப்பு, நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடும். உணவுப் பொருட்களின் விநியோகம் குறைவதால், அவற்றின் விலைகள் (Food Inflation) உயரும். இது ஏற்கனவே அதிகரித்து வரும் பணவீக்கத்தை மேலும் தீவிரமாக்கும். மேலும், இந்த வெப்பமான சூழல், விவசாயப் பூச்சிகள் பெருகவும் வழிவகுக்கும். குறிப்பாக அசுவினி (Aphids) போன்ற பூச்சிகள் வேகமாக பரவி, பயிர்களில் சாற்றை உறிஞ்சி, அவற்றை பலவீனப்படுத்தும். இதனால், பூச்சிக்கொல்லி மருந்துகளின் (Pesticides) பயன்பாடு அதிகரித்து, விவசாய செலவுகளும் கூடும். கால்நடைகள் மற்றும் கோழிகளும் வெப்ப அழுத்தத்தால் (Heat Stress) பாதிக்கப்பட்டு, உற்பத்தித்திறன் குறைந்து, நோய்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
கொள்கை மற்றும் எதிர்கால பார்வை
இந்திய விவசாயம் 65% மழையை நம்பி இருப்பதால், இதுபோன்ற திடீர் வானிலை மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படுகிறது. இந்த முறை கோதுமை மற்றும் எண்ணெய் வித்துக்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளதால், விவசாயிகள் தற்போதைய தட்பவெப்ப நிலை மாற்றங்களால் மேலும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது. தற்போதைய தழுவல் (Adaptation) உத்திகள் போதுமானதாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சீரற்ற வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் விநியோக தடங்கல்கள், விலை ஏற்ற இறக்கங்களை சிக்கலாக்குவதோடு, பணவியல் கொள்கையிலும் (Monetary Policy) தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதை சமாளிக்க, பருவநிலை அபாயங்களை முன்கூட்டியே கணித்து, காலநிலை-தாங்கும் விவசாய முறைகளை (Climate-Resilient Farming Practices) ஆதரிக்கும் வலுவான கொள்கைகள் அவசியமாகின்றன. அரசாங்கத்தின் கோதுமை கையிருப்பு (Wheat Reserves) போதுமானதாக இருந்தாலும், இந்த வெப்பமான பிப்ரவரி ரபி பயிர்களுக்கு ஒரு முக்கியமான காலமாக உள்ளது. இந்தப் பருவத்தின் அறுவடையின் வெற்றி, விவசாயிகள் வெப்ப அழுத்தத்தையும் பூச்சித் தாக்குதல்களையும் எவ்வளவு சிறப்பாக கையாள்கிறார்கள் என்பதையும், கொள்கை தலையீடுகள் இந்த தழுவலுக்கு எவ்வளவு உதவுகின்றன என்பதையும் பொறுத்தே அமையும்.
