பாஸ்மதி ரைஸ் ஃபார்மர்ஸ் & எக்ஸ்போர்ட்டர்ஸ் டெவலப்மென்ட் ஃபாரம் (BRFEDF) அமைப்பின் சார்பில், கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் 'தன்னிச்சையானவை மற்றும் வெளிப்படைத்தன்மை அற்றவை' என்று கூறி, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இந்த கட்டணங்கள் மேலும் அதிகரித்துள்ளன. இதனால் பல ஏற்றுமதி செயல்பாடுகள் லாபமற்றதாகி வருகின்றன.
BRFEDF அமைப்பின் தலைவர் பிரியங்கா மிட்டல் கூறுகையில், போர் கால அபாய கட்டணங்கள் (war-risk surcharges) மட்டும் திடீரென $800 லிருந்து $6,000 ஆக ஒரு கண்டெய்னருக்கு உயர்ந்துள்ளன. இந்த கட்டணங்கள் திடீரென அறிவிக்கப்பட்டு, தற்போது சரக்கின் மொத்த மதிப்பில் 60% முதல் 70% வரை ஆகிவிட்டன.
'கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளுக்காக, தங்களால் கட்டுப்படுத்த முடியாத நிதி அபாயங்களை தாங்களே ஏற்றுக்கொள்ளுமாறு ஏற்றுமதியாளர்கள் கேட்கப்படுகிறார்கள்' என பிரியங்கா மிட்டல் அழுத்தமாக கூறினார்.
தற்போதைய மேற்கு ஆசிய பதற்றங்களால், கப்பல் நிறுவனங்கள் சரக்குகளை ஜெபல் அலி, சோஹார் மற்றும் சலாலா போன்ற துறைமுகங்களுக்கு திருப்பி விடுகின்றன. கண்டெய்னர்கள் அடுத்தகட்ட பயணத்திட்டம் இன்றி மாற்று மையங்களில் (transfer hubs) நிறுத்தி வைக்கப்படுகின்றன, சில சமயங்களில் அவை புறப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பப்படுகின்றன. இந்த அனைத்து நகர்வுகளுக்கும், தங்களுக்கு உடன்பாடு இல்லாத நிலையிலும், முழு செலவையும் ஏற்றுமதியாளர்களே ஏற்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
ஏற்றுமதியாளர்கள் கோரும் தெளிவான விதிகள்
BRFEDF சில குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது: கப்பல் கட்டணங்கள் உண்மையான சேவைகளுக்கு மட்டுமே விதிக்கப்பட வேண்டும். கப்பல் நிறுவனங்கள் சர்ச்சைக்குரிய கட்டணங்களுக்காக கண்டெய்னர்களை தடுத்து நிறுத்தக்கூடாது. புவிசார் அரசியல் கொந்தளிப்புகளின் போது சரக்குகளை கையாள்வதற்கான தெளிவான விதிகள் தேவை.
இந்தியாவின் டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் (Directorate General of Shipping) இந்த புகார்களைக் குறித்துக்கொண்டு, ஒரு மத்திய அமைச்சக குழுவிடம் (inter-ministerial group) அனுப்பியுள்ள போதிலும், களத்தில் நிலைமை இன்னும் சீரடையவில்லை.
சிறு வணிகங்களுக்கு பாதிப்பு
சிறிய ஏற்றுமதியாளர்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெரிய உலகளாவிய கப்பல் நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட வர்த்தகர்களுக்கும் இடையிலான பேரம் பேசும் சக்தி (bargaining power) மிகப்பெரிய அளவில் வேறுபடுவதாக மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் பல சிறு வணிகங்களுக்கு வேறு வழியின்றி, கட்டணங்கள் கூடிக்கொண்டே செல்வதால் தங்கள் சரக்குகளை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சனைகளை சரி செய்யாவிட்டால், இந்தியாவின் வர்த்தக அமைப்பின் மீதான நம்பிக்கை பலவீனமடையக்கூடும் என மிட்டல் எச்சரித்துள்ளார்.
