இந்திய ராணுவம் தனது ட்ரோன்களின் பாதுகாப்பை உறுதி செய்ய டெல்லியில் புதிய AASHVAST ஆய்வுக்கூடத்தை தொடங்கியுள்ளது. இது ட்ரோன்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ரகசிய ஹார்டுவேர், மால்வேர் மற்றும் வெளிநாட்டு உளவு கருவிகளை கண்டறிந்து நீக்க உதவும்.
டிஜிட்டல் களத்தில் பாதுகாப்பு பலவீனம் நீக்கம்
இந்திய ராணுவம் தனது ஆளில்லா வான்வெளி அமைப்புகளின் (Unmanned Aerial Systems) பாதுகாப்பை உறுதிப்படுத்த AASHVAST என்ற பிரத்யேக ஆய்வுக்கூடத்தை டெல்லியில் நிறுவியுள்ளது. இது ட்ரோன்களில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் பாகங்களில் ஒளிந்திருக்கும் சைபர் உளவு அச்சுறுத்தல்களை கண்டறியும் ஒரு முக்கிய பாதுகாப்பு அரணாகச் செயல்படும். போர் சூழலில் ட்ரோன்களின் கமாண்ட் சிஸ்டம் மற்றவர்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதை இது தடுக்கும்.
அதிநவீன பரிசோதனைகள்
இயக்குநர் ஜெனரல் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கீழ் செயல்படும் இந்த மையம், ட்ரோன்களின் டிஜிட்டல் கட்டமைப்பை முழுமையாக அலசும். இங்கே ட்ரோன்களின் பிளைட் கன்ட்ரோலர்கள் மற்றும் கேமரா பேலோடுகளை ஸ்கேன் செய்து, அதில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கடவுச்சொற்கள், என்க்ரிப்ஷன் கீகள் மற்றும் ரிமோட்-ஆக்சஸ் டூல்களை டெக்னீஷியன்கள் கண்டறிவார்கள். இந்த லேப் வெளிப்புறத் தொடர்பே இல்லாத (Air-gapped) பாதுகாப்பான சூழலில் செயல்படுவதால், தகவல்கள் கசிய வாய்ப்பில்லை.
வெளிநாட்டு உதிரிபாகங்களுக்கு முற்றுப்புள்ளி
ராணுவ தளவாடங்களில் வெளிநாட்டு உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுவது பல காலமாக பெரும் கவலையாக இருந்து வந்தது. குறிப்பாக, சீன தயாரிப்பு பாகங்கள் இந்திய சப்ளை செயினில் ஊடுருவுவதை தடுக்க இந்த AASHVAST லேப் உதவும். அங்கீகரிக்கப்படாத ஃபார்ம்வேர் அப்டேட்களை தடுப்பதன் மூலம், எந்த ஒரு ட்ரோனும் எல்லைப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் முன் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த ராணுவம் முனைப்பு காட்டியுள்ளது.
