இந்திய ராணுவ மருத்துவ சேவை (AFMS), போர் களத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய மருத்துவ தொழில்நுட்பங்களை உருவாக்க AIIMS, IIT மற்றும் DRDO போன்ற முன்னணி நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது.
இந்திய ராணுவத்தின் மருத்துவ வசதிகளை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற, Armed Forces Medical Services (AFMS) ஒரு புதிய வியூகக் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் All India Institute of Medical Sciences (AIIMS), IITs, IISc, ICMR மற்றும் DRDO போன்ற நாட்டின் மிகச்சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன.
ஏன் இந்த முயற்சி?
இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்களை நம்பியிருந்த நிலை மாறி, இந்தியாவின் தட்பவெப்ப நிலை மற்றும் உயரமான மலைப்பிரதேசங்களில் பணியாற்றும் வீரர்களின் உடல்நிலைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை உருவாக்கவே இந்த முன்னெடுப்பு. இதில் முக்கியமாக:
- போர் களத்தில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் கருவிகள் (Combat casualty care)
- உடலை கண்காணிக்கும் அதிநவீன அணியக்கூடிய கருவிகள் (Wearable health monitors)
- ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மற்றும் AI மூலம் நோய்களைக் கண்டறியும் கருவிகள் உருவாக்கப்படவுள்ளன.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!
இந்தத் திட்டம் முழுக்க முழுக்க அரசு சார்ந்தது என்றாலும், இது நீண்ட கால அடிப்படையில் இந்திய பாதுகாப்பு மற்றும் மருத்துவத் துறைக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும். குறிப்பாக, பாதுகாப்பு சார்ந்த மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையில் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்கு, வருங்காலத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்தத் தொழில்நுட்பங்கள் வெறும் ஆய்வகங்களுடன் நின்றுவிடாமல், களத்தில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதுதான் இப்போதைய மிகப்பெரிய சவால். இதற்கான தயாரிப்புகள் மற்றும் உற்பத்தி ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புகள் வரும்போது, அது சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
